• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-01-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சந்தையில் அரிசி பற்றாக்குறை தடுப்பதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்குச் சொந்தமான நெல் கையிருப்பை விற்பனை செய்தல்
- நெல் சந்தைப்படுத்தல் சபையிடமுள்ள நெற்தொகையிலிருந்து 90,958 மெற்றிக்தொன் நெற்தொகையை அரிசியாக மாற்றி விற்பனை செய்வதற்கு மாவட்ட மட்டத்தில் நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் கூட்டுறவு மொத்த வியாபார நிறுவனத்திற்கும் வழங்குவதற்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கூட்டுறவு மொத்த வியாபார நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நெற்தொகையைானது ஏற்கனவே அரிசியாக்கப்பட்டு 'லக் சதொச' விற்பனை நிலையங்கள் ஊடாக கிலோ ஒன்று 76/- ரூபா வீதம் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும் தனியார் நெல் ஆலை உரிமையாளர்கள் எதிர்பார்க்கப்பட்டவாறு அரசி தொகைகளை சந்தைக்கு விடுவிக்கவில்லை யென்பதுவும் அமைச்சரவையினால் மேலும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நெல் சந்தைப்படுத்தல் சபையில் மேலும் மீதியாகவுள்ள நெற் தொகையை கூட்டுறவு மொத்த வியாபார நிறுவனத்தினாலும் தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களினாலும் அரிசியாக மாற்றி பொருத்தமான வழிமுறையொன்றின் கீழ் சந்தைக்கு அனுப்புவதற்கும் தற்போது நெல் கொள்வனவு செய்து அந்த நெற் தொகையை அரிசியாக மாற்றி சந்தைக்கு விடுவிக்காத அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்பந்தமாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சரின் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.

அதிமேதகைய சனாதிபதி அவர்களின் கோரிக்கையின் பேரில் 10,000 மெற்றிக் தொன் அரிசி இந்தோனேஷியா அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளதோடு, இந்த அரிசித்தொகையானது விரைவில் நாட்டினை வந்தடையுமெனவும் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, மேலும் சந்தையில் அரிசியின் விலை உயர் மட்டத்தில் நிலவுமாயின் இந்தோனேஷியா, வியட்நாம் அடங்கலாக அண்டை நாடுகளிடமிருந்து அரிசி இறக்குமதி செய்து துரிதமாக சந்தையில் விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன்பாலும்கூட அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டது.