2017-01-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர் கசிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டு உரிமையா ளர்களுக்கு அவசர அனர்த்த நிலைமையின் கீழ் நிவாரணங்களை வழங்குதல் - நீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாகாணத்தின் கிரிந்துஓயா ஆற்றுப்படுகைக்கு நீர்ப்பாசனம் வழங்கும் நோக்கில் உமாஓயா பல்பணி அபிவிருத்தி கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கருத்திட்டத்தின் நிருமாணிப்பு பணிகளின் போது அதன் பிரதான சுரங்கத்தில் நிகழ்ந்துள்ள நீர் கசிவு காரணமாக பண்டாரவளை மற்றும் எல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 08 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கிணறுகள் வற்றிப் போதல், வீடுகளில் வெடிப்புகள் ஏற்படுதல் போன்ற பிரதிகூலமான பாதிப்புகள் எழுந்துள்ளன. இதன் விளைவாக இந்த பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்களின் உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதோடு, அவர்களுடைய நாளாந்த வாழ்வாதார வழிகளின்பாலும் பாரிய தாக்கம் நிகழ்ந்துள்ளது. உருவாகியுள்ள அனர்த்த நிலைமையை சீர்செய்து இந்த மக்களின் அன்றாட வாழ்வாதார வழிகளை பழையநிலைக்கு கொண்டு வருவதற்காக முழுமையாக சேதமடைந்த வீடுகள் சார்பில் புதிய வீடுகளை நிருமாணித்தல், குடிநீர் இணைப்புகளை இலவசமாக வழங்குதல் போன்ற அத்தியாவசிய நிவாரணங்களை துரிதமாக வழங்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |