2017-01-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவனத்தை பட்டம் வழங்கும் நிறுவனமொன்றாக தரமுயர்த்துதல் - இலங்கையில் புடவை மற்றும் ஆடை கைத்தொழிலின் பயிற்சி, தரப்பரிசோதனை, தொழினுட்பம் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும் பணியில் இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவகம் ஈடுபட்டு வருகின்றது. தற்போது ஆண்டொன்றில் சுமார் 4,500 மாணவர்கள் இந்த நிறுவகத்தில் குறுகியகால மற்றும் நீண்டகால பாடநெறிகளைக் கற்கின்றதோடு, தற்போது கேள்விக்கு ஏற்றவாறு விரிவான சான்றிதழ் மற்றும் டிப்ளோமா மட்ட பாடநெறிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. தொழிற் சந்தையில் போட்டிகரமான நிலைமைக்கு முகம்கொடுக்கும் ஆற்றல் இதன் மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தியாவின் பஞ்சாப் நகரத்தில் அமைந்துள்ள "லவ்லி" தொழில்சார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புடவை மற்றும் ஆடை துறைசார்ந்த பட்டத்தினை வழங்கும் நிறுவகமொன்றாக இந்த நிறுவகத்தை தரமுயர்த்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவகத்திற்கும் இந்தியாவின் "லவ்லி" தொழில்சார் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |