2016-12-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
முதிய மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள கலைஞர்களுக்கு சலுகையளித்தல் - தமது வாழ்க்கையை கலைக்காக அர்ப்பணித்து, கலைத்துறையின் மேம்பாட்டுக்காக சிறந்த சேவையினை ஆற்றிய முதிய மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள கலைஞர்களுள் குறைந்த வருமானம் பெறும் கலைஞர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் உதவித்திட்டமொன்றின் கீழ் தற்போது அத்தகைய 1,019 கலைஞர்களுக்கு வருடாந்தம் 5,000/- ரூபா வீதம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தற்போதைய பொருளாதார நிலைமைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு குறைந்த வருமானம் பெறும் கலைஞர்களுக்காக வருடாந்தம் வழங்கப்படும் 5,000/- ரூபாவைக் கொண்ட உதவித் தொகையை 2017 ஆம் ஆணடில் 10,000/- ரூபா வரை அதிகரிப்பதற்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும் குறைந்த வருமானம் பெறும் கலைஞர்களின் எண்ணிக்கையை 5,000 வரை அதிகரிப்பதற்குமாக உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |