2016-11-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விமான நிலையத்தில் இடைத்தரகு நடவடிக்கைகளை தடைசெய்தல் - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொது பிரதேசமாகக் கருதப்படும் வருகையாளர் மற்றும் புகுமுக மண்டபங்களில் அங்குமிங்கும் செல்லும் இடைத்தரகர்களினால் அனுமதி பெறாது போக்குவரத்து வசதிகளை வழங்குதல், சட்டபூர்வமற்ற பணமாற்றல் மற்றும் பிரயாணப் பொதிகளை ஏற்றுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணமாக விமானப் பயணிகளும் அதேபோன்று விமான நிலையங்கள், விமான சேவைகள் (இலங்கை) கம்பனியும் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளன. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாமையினால் விமான நிலைய மனையிடத்தில் பல்வேறுபட்ட ஆட்களினால் மேற்கொள்ளப்படும் "இடைத்தரகு" நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சிவில் விமானசேவைகள் சட்டத்தை திருத்தும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |