2016-11-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இராணுவ வைத்தியசாலை (நாராஹேன்பிட்ட) கருத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - இராணுவ தலைமையத்தில் தாபிக்கப்பட்டிருந்த இராணுவ வைத்தியசாலை நாராஹேன்பிட்ட பிரதேசத்திற்கு இடம் நகர்த்துவதற்கான கருத்திட்டத்தின் முதலாம் இரண்டாம் கட்டங்களுக்கான நிருமாணிப்பு பணிகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த வைத்தியசாலை சகல வசதிகளுடன் கூடிய முழுமையான வைத்தியசாலையொன்றாக மாற்றும் பொருட்டு அதன் மூன்றாவது கட்டத்தின் கீழ் மருத்துவ வசதிகள், மருத்துவ உத்தியோகத்தர்களினதும் ஏனைய உத்தியோகத்தர்களினதும் தங்குமிட வசதிகள், களஞ்சிய வசதிகள், மற்றும் பராமரிப்பு வசதிகள் என்பவற்றுடனான மூன்று புதிய கட்டடத் தொகுதிகளை நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 7,088.32 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் இராணுவ வைத்தியசாலை கருத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் 2017 ஆம் ஆண்டில் அதன் நிருமாணிப்பு பணிகளை ஆரம்பிக்கும் பொருட்டும் பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |