2016-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு மருந்து உற்பத்தி செய்யும் செயற்பாட்டினை விரிவுபடுத்துவதற்காக அரசாங்க - தனியார் கூட்டுத் தொழில்முயற்சிகளை ஆரம்பித்தல் - நாட்டின் மருந்து தேவையின் பெருமளவு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதோடு, இதன்சார்பில் அரசாங்கம் வருடாந்தம் பாரிய அளவில் அந்நிய செலாவணியை செலவு செய்து வருகின்றது. இதற்கு மாற்று வழியாக மருந்துகளை இலங்கையில் உற்பத்தி செய்யும் செயற்பாட்டினை விரிவுபடுத்துவதற்காக அரசாங்க - தனியார் கூட்டு தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் உயர் தரம் வாய்ந்த மருந்துகளை குறைந்த விலையில் உற்பத்தி செய்வதற்காக அரசாங்க மருந்துப் பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து மருந்துகளை உற்பத்தி செய்யும் கூட்டுத் தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |