2016-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் கழிவு முகாமைத்துவத்தின் பொருட்டு உற்பத்தியாளர்களின் / வர்த்தகர்களின் மற்றும் நுகர்வோரின் பொறுப்பு - எவ்வளவு சட்டங்களும் அறிவூட்டல்களும் இருந்தாலும் வர்த்தகர்களும் நுகர்வோரும் எவ்வித பொறுப்புமின்றி இயற்கையாக உக்கிப்போகாத பல்வேறு விதமானதும் அளவுகளைக் கொண்டதுமான பொதிகளையும் எலெக்ரோனிக் மற்றும் மின்னணு கழிவுகளை சூழலுக்கு விடுவிக்கின்றனர். தற்போது வருடாந்தம் நாட்டினுள் வரும் மொத்த பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் அளவுகளில் சுமார் 60 சதவீதமானவை (210,000 மெ.தொ.) இயற்கை சூழலில் சேர்க்கப்படுகின்றன. இதற்குத் தீர்வொன்றாக "சுற்றாடலை மாசடையச் செய்பவர்கள் அதற்கு நட்டஈடு செலுத்துதல் வேண்டும்" என்னும் குறிக்கோளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு வழிமுறையொன்று பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பொருட்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தில் ஏதேனும் வைப்புத் தொகையொன்றை உற்பத்தியாளர்களினால் / வர்த்தகர்களினால் தற்காலிகமாக நுகர்வோரிடமிருந்து அறிவிடுவதற்கும் பொருட்களின் பாவனையின் பின்னர் எஞ்சும் இயற்கையாக உக்கிப்போகாத பொதிகள் மற்றும் கழிவுகளை மீண்டும் பொறுப்பேற்கும் போது அவ்வாறு பெறப்பட்ட வைப்புகளை மீண்டும் செலுத்தும் வழிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நீண்டகாலம் பயன்படுத்தப்படும் எலெக்ரோனிக் மற்றும் மின்னணு உபகரணங்கள் சார்பில் செய்யப்படும் வைப்புகளுக்காக அதன்மீது கணக்கிடப்படும் வருடாந்த வட்டி நுகர்வோருக்குச் செலுத்தப்படும். இதன் மூலம் கழிவுப் பொருட்கள் குறிப்பிடப்பட்ட இடங்களில் சேர்வதை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்த கழிவுப் பொருட்களை சுற்றாடல் நட்புறவு ரீதியில் முகாமித்துக் கொள்வது இலகுவானதாகும். இதற்கமைவாக இலங்கையில் கழிவு பொருள் முகாமைத்துவத்தின்பால் உற்பத்தியாளரின் / வர்த்தகரின் மற்றும் நுகர்வோரின் பொறுப்பினை உறுதிசெய்து மேற்போந்த வழிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான சிபாரிசுகளைச் சமர்ப்பிக்கும் பொருட்டு உரிய நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்த குழுவின் சிபாரிசுக்கு அமைவாக முன்னோடிக் கருத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |