2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3,000 மழைநீர் சேகரிக்கும் நீர்தாங்கிகளை நிருமாணித்தல் - யாழ்ப்பாணம் குடாநாடு முழுவதும் பாதுகாப்பான குடிநீர் தொடர்பில் பாரிய பிரச்சினை நிலவுகின்றதோடு, இதற்குத் தீர்வொன்றாக நிலையான சுத்தமான குடிநீர் மூலவளமொன்றை அந்த மக்களுக்கு வழங்குவதனை குறியிலக்காகக் கொண்ட கருத்திட்டப் பிரேரிப்பொன்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயலகத்தினால் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரிப்பை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிக்கும் 3,000 தாங்கிகளை நிருமாணிப்பதற்காக 300 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடொன்றை வழங்குவதற்கு குறித்த உயர்ஸ்தானிகராலயத்தினால் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்தப் பிரேரிப்பை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |