2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நிலவும் கிராமங்களைச் சுற்றி 800 கிலோ மீற்றர் தூரத்துக்கான மின்சார வேலிகளை அமைத்தல் - காட்டு யானைகள் - மனித மோதல் காரணமாக வருடாந்தம் 60-80 மனித உயிர்கள் இல்லாமற் போவதோடு, 200 காட்டு யானைகளுக்கு மேலாக மரணிக்கின்றன. உணவு மற்றும் நீரைத் தேடி கமத்தொழில் பயிர்ச்செய்கை நிலங்களுக்கு வரும் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த மோதலை கணிசமான மட்டத்தில் கட்டுப்படுத்த முடியுமென்பதோடு, அதற்காக எடுக்கக்கூடிய மிகப் பயனுள்ள வழிமுறையாவது மின்சார வேலிகளை அமைப்பதாகும் என்பது தெரியவந்துள்ளது. காட்டு ஒதுக்கங்கள் மற்றும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் நிலவும் கிராமங்கள் மற்றும் பயிர்ச் செய்கை நிலங்கள் என்பனவற்றைச் சுற்றி தற்போது நிருமாணிக்கப்பட்டு வரும் மின்சார வேலியின் நீளம் சுமார் 3,300 கிலோ மீற்றர்களாகும். காட்டு யானை - மனித மோதல் முகாமைத்துவ தேசிய திட்டம் என்பதன் கீழ் 2016 ஆம் ஆண்டிற்கு தேவையான மின்சார வேலி 275 கிலோ மீற்றர் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்கீழ் காட்டு யானைகள் - மனித மோதல் பரவலாக அறிக்கையிடப்படும் 07 வனவுயிர் வலையங்களில் 2017 ஆம் ஆண்டில் 800 கிலோ மீற்றர் நீளமான மின்சார வேலி நிருமாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளதோடு, அதற்குத் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்யும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |