2016-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பத்தரமுல்லை, பொல்தூவ சந்தியிலிருந்து "சுஹுருபாய" ஊடாக உடுமுல்லை சந்தி வரையிலான துணைப்பாதை நிருமாணிப்பு - கொழும்பு நகரத்தில் அமைந்துள்ள அரசாங்க நிறுவனங்கள் யாவும் பத்தரமுல்லை, ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நிருவாக நகரத்தினுள் தாபிப்பது அரசாங்கத்தின் கொள்கையாகும். இதற்கமைவாக, பெரும்பாலான அரசாங்க நிறுவனங்கள் ஏற்கனவே பத்தரமுல்லை பிரதேசத்தில் தாபிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஒருங்கிணைவாக பத்தரமுல்லை மற்றும் அதற்கு அண்மித்த பிரதேசங்களுக்குத் தேவையான நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து போன்ற உட்கட்டமைப்பு வசதிகளையும் துரிதமாக வழங்கவேண்டியுள்ளது. அரசாங்க நிறுவனங்களுக்கு இலகுவாக செல்வதை நோக்காகக் கொண்டு பொல்தூவ சந்தியிலிருந்து கொஸ்வத்தை சந்திவரை 4 கி.மீ.நீளமான துணைப்பாதையொன்றை நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. தற்போது பத்தரமுல்லை சந்தியில் நிலவும் கடும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில், முதற் கட்டமாக திட்டமிடப்பட்டுள்ள பொல்தூவ சந்தியிலிருந்து "சுஹுருபாய" ஊடாக செல்லும் துணை பாதையை உடுமுல்லை சந்தி வரை நீடிப்பதற்கும் இந்த பணியை 250 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்ட செலவில் மேற்கொள்வதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |