2016-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நிலவும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புதல் - நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் தரம்மிக்க கல்வி சமமாக கிடைப்பதை உறுதி செய்வதற்கு போதுமான அளவு ஆசிரியர்கள் அரசாங்க பாடசாலைகளில் இருத்தல் வேண்டும். ஆயினும், நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் சுமார் 22,500 ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுகின்றது. விசேடமாக கிராமிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு போதுமான ஆசிரியர்களோ வளங்களோ இல்லை. இந்தப் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை வழங்கும் நோக்கில் அரச பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளையும் தேசிய கல்விக் கல்லூரிகளின் டிப்ளோமாதாரர்களையும் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்து கொள்வதற்கு மேலதிகமாக பல்கலைக்கழக நுழைவுக்கான தகைமைகொண்ட உயர்தரம் சித்தியடைந்த இளைஞர்கள் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகமொன்றினால் வழங்கப்படும் கல்வியியல் (விஞ்ஞான) அல்லது கல்வியியல் (கலை) பட்டமொன்றை பூர்த்தி செய்ததன் பின்னர் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அதற்காக அரசாங்க வங்கியொன்றின் மூலம் 275,000/- ரூபாவைக் கொண்ட கடன் தொகையொன்றை வருடாந்தம் குறித்த இளைஞர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதற்கும் பட்டபடிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்காக உள்வாங்கப்படும் பொருட்டு தகைமையுடைய இளைஞர்களினால் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்ததன் பின்னர் 10 வருட காலத்திற்கு தாம் தெரிவு செய்யும் பிரதேசத்திலுள்ள ஆசிரியர் வெற்றிடம் நிலவும் பாடசாலையொன்றில் சேவையாற்றக்கூடிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆயினும், உரிய பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவராக 10 வருட காலம் சேவையாற்றினால் பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கடன்தொகையை மீள அறவிடாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கமைவாக அரசாங்க பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு மேலதிகமாக ஆரம்ப கட்டத்தில் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு உயர்தரம் சித்தியடைந்த 5,000 இளைஞர்களை விஞ்ஞானம் மற்றும் கணித பாட ஆசிரியர்களாக ஆட்சேர்ப்புச் செய்யும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதேபோன்று அரசாங்க பாடசாலைகளில் தற்போது நிலவும் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறைக்கு மாற்று வழியாக பட்டதாரிகளை துரிதமாக ஆட்சேர்ப்புச் செய்வதற்கு கல்வி அமைச்சுக்கு அதிகாரத்தை கையளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. |