2016-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாதுருஓயா வலதுகரை அபிவிருத்திக் கருத்திட்டம் - 1982 ஆம் ஆண்டில் நிருமாணிக்கப்பட்ட மாதுருஓயா நீர்த்தேக்கமானது துரித மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிருமாணிக்கப்பட்ட பிரதான நீர்த்தேக்கம் ஒன்றாகும். பொலன்நறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை உள்ளடக்கிய மகாவலி "பீ" வலயத்தில் 39,000 ஹெக்டயார் காணிகள் கமத்தொழில் நோக்கங்களுக்காக அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டது. இதன் இடதுகரை அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நிருமாணிப்புகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்த போதிலும் போதுமான நிதி ஏற்பாடுகள் இல்லாமையினால் வலதுகரை பிரதேசத்தை அபிவிருத்தி செய்தலானது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கமைவாக பல ஆண்டுகளாக நிலவிய யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பொலன்நறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சமூக - பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு குடிநீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி போன்றவற்றை துரிதப்படுத்துவதை நோக்காகக் கொண்டு "மாதுருஓயா வலதுகரை அபிவிருத்திக் கருத்திட்டத்தை" 2017-2020 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |