2016-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் மற்றும் நிந்தவூர் பிரதேசங்களை பாதிக்கும் கடல் அரிப்பை தடுத்தல் - அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் துறைமுகத்துக்கு வடக்கு பக்கமாக அமைந்துள்ள கரையோரத்தில் சுமார் 550 மீற்றர் பிரதேசத்தில் நிகழும் கடும் கடல் அரிப்பை தடுப்பது சம்பந்தமாக நீண்டகால தீர்வுகளை ஆராய்வதற்கும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பது சம்பந்தமாகவும் ஆராய்ந்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பிரேரிப்பொன்றுக்கு அமைவாக அமைச்சரவையினால் ஏற்கனவே உத்தியோகத்தர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த கரையோரப் பிரதேசத்தின் சுமார் 150 மீற்றரின் பாதுகாப்பு பணிகள் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 400 மீற்றர்கள் கொண்ட மீதி கரையோரப் பிரதேசம் கூடிய விரைவில் பாதுகாக்கப்படவேண்டியுள்ளது. நீண்டாகல பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு காலம் செல்லுமென்பதால் அதுவரை உடனடி நடவடிக்கைகளாக கரையோரத்தில் தடுப்பு மண்மேடுகளை எழுப்புதல், கற்களை இடுதல் போன்ற மாற்று வழிகளை கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோரவள முகாமைத்துவ திணைக்களத்தின் ஒத்தாசையுடன் செய்யும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |