2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் மற்றும் நிந்தவூர் பிரதேசங்களை பாதிக்கும் கடல் அரிப்பு தொடர்பிலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டு கொடுப்பனவு தொடர்பிலும் அறிக்கையிடும் பொருட்டு குழுவொன்றை நியமித்தல் - அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் மற்றும் நிந்தவூர் கரையோர பிரதேசங்களில் நிகழும் கடல் அரிப்பு காரணமாக வீடுகள், நிலப்பிரதேசங்கள், குடிநீர் மூலவளங்கள் போன்றன பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளும் மீனவர்களும் இதனால் மிகப் பாதிப்படைந்துள்ளதோடு, அவர்களுடைய வாழ்வாதார வழிகள் இதன் காரணமாக பாரிய பாதிப்புக்கு முகங்கொடுத்துள்ளது. இந்த நிலைமை பற்றி ஆழமாக ஆராய்ந்து நிகழ்ந்துள்ள சொத்துக்களின் சேதங்கள் பற்றி மதிப்பிடுவதற்கும் பாதிக்கப்பட்டுள்ள விவசாய மற்றும் மீனவ குடும்பங்களின் எண்ணிக்கையை சரியாக இனங்காண்பதற்கும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய நட்டஈடு சம்பந்தமான சிபாரிசுகளை பெற்றுக் கொள்வதற்குமான சிரேட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |