2016-07-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையில் பொறியியல் தொழிலை ஒழுங்குறுத்துவதற்காக பொறியியலாளர்களை பதிவு செய்து பொறியியல் சபையை தாபித்தல் - இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள பல்வேறுபட்ட கல்வி நிறுவனங்களின் ஊடாக தகைமைப் பெறும் பொறியியல் தொழில்சார்பாளர்கள், அவர்கள் கற்ற கல்விப் பாடநெறியின் தரம் மற்றும் மட்டம் என்பவற்றுக்கு அமைவாக பல்வேறுபட்ட தொழிற்தகைமைகளை கொண்டுள்ளதோடு, அவர்கள் பல்வேறு மட்டங்களினான பொறியியல் பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆயினும், அவ்வாறு பல்வேறுபட்ட நிறுவனங்களில் தகைமைபெறும் மருத்துவம். சட்டம் போன்ற துறைகளைச் சேர்ந்த தொழில் சார்பாளர்கள் சம்பந்தமாக பின்பற்றப்படும் பதிவு செய்யும் அல்லது உரிமப்பத்திரம் வழங்கும் வழிமுறை போன்ற அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையொன்று பொறியியல் தொழில்சார்பாளர்கள் சம்பந்தமாக பின்பற்றப்படுவதில்லை. இதற்கமைவாக, பொறியியல் தொழில்சார்பாளர்களின் தொழில்சார் தரத்தை பேணுவதற்கும் ஒழுங்குறுத்துவதற்குமாக பொறுப்பு கூறும் "இலங்கை பொறியியலாளர் சபை" ஒன்றைத் தாபிப்பதற்கும் பொறியியல் தொழி்ல்சார்பாளர்களை பதிவு செய்வதற்கும் அதனோடிணைந்த விடயங்களை செய்வதற்குமாக வரையப்பட்ட இலங்கை பொறியியலாளர்களின் சபை சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினாலும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |