2016-06-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கடமை நேரத்தின் பின்னர் லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளல் - இலங்கையில் வருடாந்தம் பிறப்பிலேயே இருதய குறைபாடுகளுடனான குழந்தைகள் சுமார் 2,500 - 3,000 வரை பிறக்கின்றதோடு, இவர்களுள் சுமார் 2,000 பேர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படுதல் வேண்டும். இதுவரை வருடாந்தம் சுமார் 900 நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதோடு, சிறிய எண்ணிக்கையிலான அறுவை சிகிச்சை மாத்திரம் கராபிட்டிய மற்றும் ஶ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு உரிய காலத்தில் அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்த முடியாத குழந்தைகள் மரணமடைதல் அல்லது பழைய நிலைக்கு கொண்டுவர முடியாத சிக்கலான நிலைக்கு ஆளாதல் என்பனவற்றுக்கு ஆளாகின்றன. லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு நிலவும் உட்கட்டமைப்பு வசதிகள், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் விசேட பயிற்சி பெற்ற பதவியணி என்பவற்றின் குறைவான பயன்பாடு காணக்கிடைப்பது வாராந்த நாட்களில் பி.ப.4.00 மணிக்கு பின்னரும் வார இறுதி நாட்களிலும் உரிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படாததன் காரணத்தினாலாகும். காத்திருப்போர் பட்டியலிலுள்ள நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்குரிய அறுவை சிகிச்சைகளை விரைவாக செய்யும் நோக்கில் லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடமை நேரத்தின் பின்னர் இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு கடந்த வருடத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக, குறைந்த வசதிகளுடனான குழந்தைகளுக்கு சிகிச்சைப் பெறுவதற்கு உதவும் ரோட்டரி கழகம் மற்றும் அதனோடு இணைந்த அமைப்பொன்றான "Gift of Life International ” அமைப்பு அவ்வாறு கடமை நேரத்தின் பின்னர் செய்யப்படும் இருதய அறுவை சிகிச்சையொன்றுக்கு 1,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் நிதி வழங்குவதோடு, இந்த நிதியத்தைப் பயன்படுத்தி லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடமை நேரத்தின் பின்னர் இருதய சத்திர சிகிச்சைகளைச் செய்யும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|