2016-06-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாகாண சபைகளுக்கும் வரிசை அமைச்சுக்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பைப் பலப்படுத்துதல் - மாகாண சபைகளின் பணிகளை வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்தும் போது முகம்கொடுக்க நேரிடும் பிரச்சினைகள் பற்றி மாகாணங்களின் முதலமைச்சர்களின் பங்குபற்றுதலுடனான அமைச்சரவைக் கூட்டத்தின் ஆரம்பத்தில் கலந்துரையாடப்பட்டதோடு, அங்கு மாகாண சபைகளின் கீழ் நிருவகிக்கப்படும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்தல், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புதல், மாகாண சபைகளுக்குத் தேவையான வளங்களை பெற்றுக் கொள்வதில் முகம்கொடுக்க நேரிடும் கஸ்டங்கள், கழிவு முகாமைத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதேபோன்று மாகாண சபைகளுக்கும் வரிசை அமைச்சுக்களுக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்புடன் அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தேவையும்கூட வலியுறுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறைக்கு அமைவாக மாகாண சபைகளுக்கு வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்படுவது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செலவுத் தலைப்புகளின் கீழாகும். இதற்குப் பதிலாக 2015 ஆம் ஆண்டின் இறுதிவரை இணங்கியொழுகப்பட்ட பழைய வழிமுறையைப் பின்பற்றுவதற்கு மாகாணங்களின் முதலமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் இதற்கு முன்னர் நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக பொது திறைசேரியினால் நேரடியாக அந்தந்த மாகாண சபைகளுக்கு நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்குவதற்கு இயலுமாகும் வகையில் 2015 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |