2016-06-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நலன்புரி முகாம்களில் வசிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துதல் - 2016 மார்ச் மாதம் இறுதியளவில் மோதல் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்த 251,000குடும்பங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆயினும், இந்த மாகாணங்களில் தொடர்ந்தும் மீளக் குடியமர்த்தப்பட வேண்டிய குடும்பங்களின் எண்ணிக்கை 14,000 இற்கு மேலாகும். தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 31 நலன்புரி நிலையங்களில் 1,109 இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருப்பதோடு, அவர்களுள் 641 குடும்பங்கள் காணிகள் அற்ற குடும்பங்களென பதிவு செய்யப்பட்டுள்ளது. காணி இல்லாத இந்த குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணியிலிருந்து 65 ஹெக்டயார் காணித் துண்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரினால் இனங்காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை நலன்புரி நிலையங்களில் வசிக்கும் 400 காணி இல்லாத குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்காக இனங்காணப்பட்டுள்ள மேற்போந்த காணியை விடுவித்துக் கொண்டு அரசாங்கத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |