2016-05-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாரவில - தல்வில கரையோர மணல் ஊட்ட கருத்திட்டம் (இரண்டாம் கட்டம்) - இலங்கையில் தற்போது மிகவும் கடுமையான கரையோர மண் அரிப்புக்கு மாரவில - தல்வில கரையோரம் ஆட்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளதோடு, இது ஆண்டொன்றில் சுமார் இரண்டு கிலோ மீற்றர் பிரதேசத்துக்கு விரிவடைந்து செல்கின்றது. இதன் காரணத்தினால் மாரவில - தல்வில கரையோர பிரதேசத்தில் வசிக்கும் மக்களின் காணி, சொத்துக்கள், குடியிருப்பு மற்றும் அன்றாட வாழ்வாதார நிலை என்பனவற்றுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதோடு, பிரதேசத்தின் சுற்றுலா கைத்தொழிலுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மண் அரிப்புக்கு தீர்வொன்றாக கருங்கல்லை பிரதானமாகக் கொண்டு தடுப்பு கட்டமைப்பொன்றை இடுவதன் மூலம் இந்த பிரதேசங்களில் நிலவும் கரையோர மண் அரிப்புக்கு தீர்வு கிடைக்கின்ற போதிலும் கடற்றொழில் மற்றும் சுற்றுலா கைத்தொழிலுக்கு பிரதிகூலமான பாதிப்பு ஏற்படும். மண் அரிப்புக்குள்ளாகியுள்ள கரையோர பிரதேசத்திற்கு செயற்கையாக மண் ஊட்டப்படுவது இதற்கான நிலையான தீர்வொன்றாகுமென கரையோர மண் அரிப்பைத் தடுப்பதற்காக விஞ்ஞான ரீதியிலும் நிலைபேறுடையதுமான தீர்வுகளை கண்டறியும் பொருட்டு நியமிக்கப்பட்ட நிபுணத்துவ உத்தியோகத்தர் குழுவினால் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோரவள முகாமைத்துவ திணைக்களத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகளை பயன்படுத்தி மாரவில - தல்வில கரையோரத்தில் மணல் ஊட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |