2016-04-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பௌத்த வலுவூட்டல் நிதியமொன்றை தாபித்தல் - இலங்கையில் சுமார் 12,150 பௌத்த விஹாரைகள் உள்ளதோடு, இவற்றுள் சுமார் 750 பிரிவெனாக்கள் நடாத்தப்பட்டு வருகின்றது. அதேபோன்று சுமார் 150 ஆரண்யசேனாசனாக்களும் நாடு முழுவதும் வியாபித்துள்ளன. பௌத்த மதம் மற்றும் அதுசார்ந்த கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பிரிவெனாக் கல்வியின் ஊடாக பிக்குமார்களின் மற்றும் பொது மக்களின் அறிவினை வளர்ப்பதற்கும் இந்த விஹாரைகள் அளப்பரிய சேவையை நிறைவேற்றுகின்றன. விஹாரை மற்றும் பிரிவெனா சார்ந்த பிரச்சினைகள் காரணமாக விஹாரைவாழ் பிக்குமார்கள் அவர்களுடைய சமூக கடப்பாட்டினை நிறைவேற்றுவதில் பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளதோடு, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த பணிகளின்போது தற்போது ஏற்கவேண்டிவருகின்ற செலவுகள் விஹாரைகளினால் ஏற்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது. விஹாரைகள் மற்றும் பிரிவெனாக்களின் தேவைகளை பூர்த்தி செய்து பௌதிக வளங்களின் முகாமைத்துவத்திற்கு புத்தசாசன அமைச்சு, பௌத்த அலுவல்கள் திணைக்களம், கல்வி அமைச்சு என்பன கணிசமான பங்களிப்பினை வழங்கினாலும் அது வருடாந்த வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாட்டிற்குள் வரையறுக்கப்படும். கஷ்ட பிரதேசங்களிலுள்ள பெரும்பாலான விஹாரைகளுக்கு கொடையாளர்களின் நன்கொடைகள் போன்றவையும் கிடைப்பது அரிதாகும். மேற்போந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நேரடிப் பங்களிப்பிற்கு மேலதிகமாக வணக்கத்திற்குரிய பௌத்தமத தலைவர்களினால் பிரேரிக்கப்பட்டுள்ளவாறு பல்வேறுபட்ட வருமானங்களையும் நன்கொடைகளையும் பயன்படுத்தி "பௌத்த வலுவூட்டல் நிதியம்" என்னும் பெயரில் முறையான நிதியமொன்றை தாபித்து அதன்மூலம் பொது கொள்கையொன்றுக்கு அமைவாக பௌத்தமத வழிபாட்டுத் தலங்களைத் தெரிவுசெய்து வசதிகளை வழங்குவதற்கு நிதி ஏற்பாடுகளை வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |