2016-01-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொலன்நறுவை மாவட்ட நீர்ப்பாசன திட்ட அபிவிருத்தி கருத்திட்டம் - பொலன்நறுவை மாவட்டம் இலங்கையில் நெற்செய்கை பண்ணப்படும் பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளதோடு, இந்த மாவட்டத்தில் நெற்செய்கை பண்ணப்படும் காணியின் அளவானது 80,000 ஏக்கர்களுக்கு மேலாகும். ஆயினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நீண்டகாலமாக நிலவும் வரட்சி போன்ற நிலமைகள் காரணமாக மாவட்டத்தினுள் நெற்செய்கையானது அண்மைக் காலமாக பின்னடைவைக் கண்டுள்ளது. பொலன்நறுவை மாவட்ட கமக்காரர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மாற்று வழிகளைச் செய்யும் பொருட்டு நீர்ப்பாசனத் திணைக்களம் 2016 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்து ஆறு (06) வருடகால நீர்பாசன அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை செயற்படுத்துவதற்கு பிரேரித்துள்ளது. இதற்கமைவாக, குறுகியகால, நடுத்தவணைக்கால, நீண்டகால என்னும் மூன்று கட்டங்களின் கீழ் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டுவரை ஆறு (06) வருட காலத்திற்குள் 7 பில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டின் மூலம் இந்த அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |