2016-01-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மகாவலி கால்நடைவளர்ப்பு மற்றும் கமத்தொழில் வர்த்தக (தனியார்) கம்பனியை அரச தனியார் கூட்டுத் தொழில்முயற்சியொன்றாக மறுசீரமைக்கும் பொருட்டு தனிப்பட்ட முதலீட்டாளர் ஒருவரை இணைத்துக் கொள்தல் - 1999 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட மகாவலி கால்நடைவளர்ப்பு மற்றும் கமத்தொழில் வர்த்தக (தனியார்) கம்பனியானது இலங்கை மகாவலி அதிகாரசபைக்கு முற்றுமுழுதாக உரிமையுடைய கம்பனியொன்றாகும். இந்த கம்பனி தாபிக்கப்பட்டதன் முக்கிய நோக்கங்களில் கால்நடைவளர்ப்பு கட்டுப்பாடு, பால் உற்பத்தி, கமத்தொழில் பயிர்ச்செய்கை போன்ற துறைகள் சம்பந்தமாக செயலாற்றி கமக்காரர்களுக்குத் தேவையான அறிவையும் விரிவாக்கல் சேவையையும் வழங்குவது பிரதானமானதாகும். தற்போது இந்தக் கம்பனிக்குச் சொந்தமான இரண்டு பண்ணைகள் கிராந்துருகோட்டே மற்றும் தம்மின்ன பிரதேசங்களில் தாபிக்கப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக நட்ட நிலையில் இருந்த இந்தக் கம்பனி, பின்னர் மேற்கொள்ளப்பட்ட முகாமைத்துவ மாற்றங்கள் மற்றும் தேவையற்றதும் வீண்விரயமான செலவுகளைக் குறைத்துக் கொண்டதன் மூலம் நட்டமற்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆயினும், மூலதன சொத்துக்கள் குறைவடைதல், இயந்திர சாதனங்களின் தேய்மானம் முதலியன காரணமாக கம்பனியின் நிலைபேறுடைய தன்மைக்கு மூலதன முதலீடொன்றைச் செய்வது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, அரச - தனியார் கூட்டுத் தொழில்முயற்சியொன்றின் மூலம் மேற்போந்த கம்பனியின் பணிகளை நடாத்திச் செல்லும் பொருட்டு பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை தெரிவு செய்வதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |