2016-01-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தோட்டத் தொழிலாளர்களின் நலனோம்புகைக்காக பிரதேச சபைச் சட்டத்தினைத் திருத்துதல் - பெருந்தோட்ட குடியேற்றங்களுக்குத் தேவையான பொது வசதிகளை வழங்கும் நோக்கில் அரசாங்கம் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ரீதியிலான தடைகளை நீக்கும் கடும் தேவை நிலவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பெருந்தோட்ட குடியேற்றங்களுக்குத் தேவையான பொது வசதிச் சேவைகளை வழங்குவதற்கு பிரதேச சபை நிதியங்களை பயன்படுத்தக்கூடிய விதத்தில் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை திருத்துவதற்குத் தேவையான சட்டங்களை வரையும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |