2015-12-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மற்றும் காலநிலை மாற்ற பாதிப்புகளுக்கு ஏற்றவிதத்தில் வேளாண் உயிர்பன்முகதன்மையின் பாதுகாப்பினையும் பயன்பாட்டினையும் தழுவும் கருத்திட்டம் - காலநிலை மாற்ற பாதிப்புகளுக்கு ஏற்றவிதத்தில் மேற்குறிப்பிட்ட கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்தும் பொருட்டு ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் உலகளாவிய சுற்றாடல் வசதிகள் என்பவற்றின் ஊடாக இலங்கைக்கு சுமார் 172 மில்லியன் ரூபாவைக் கொண்ட கொடை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலவும் விசேட உயிர்பன்முகதன்மைக்கு காலநிலை மாற்றங்களின் மூலம் நிகழும் பிரதிகூலமான பாதிப்புகளுக்கு தீர்வுகளைக் கண்டறிவது இந்தக் கருத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். இதற்கமைவாக, முன்னோடிப் பிரதேசங்களாக தெரிவுசெய்யப்பட்ட விசேட மூன்று (03) வேளாண்மை முறைமைகள் ஊடாக அதாவது வயல் சமதரை முறைமையொன்றாக களுத்துறை மாவட்டத்தின் மில்லெனிய பிரதேச செயலகப் பிரிவிலும் மலைநாட்டு வீட்டுத்தோட்ட முறைமையொன்றாக கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலகப் பிரிவிலும் உயர்நீர்த்தேக்கமொன்றிலிருந்து அடுத்த நீர்தேக்கம் நீர் பெறும் குளமுறைமையொன்றாக (Cascade Tank System)) குருநாகல் மாவட்டத்தின் கிரிபாவ பிரதேச செயலகப் பிரிவிவிலும் இந்த கருத்திட்டத்தை 2017 ஆம் ஆண்டுவரை நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |