• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி
- தேசிய நெடுஞ்சாலைகள், மாகாண வீதிகள், துணை வீதிகள் உட்பட ஒதுக்கு வீதிகள் அடங்கலாக பிரதேச சபை வீதிகளை புனரமைப்பதன் மூலம் தெரிவுசெய்யப்பட்ட கிராமிய மைய நிலையங்களுக்கிடையிலான தொடர்பினை மேம்படுத்தும் நோக்கில் இணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள் 3,108 கிலோ மீற்றர்களும் தேசிய நெடுஞ்சாலைகள் 248 கிலோ மீற்றர்களும் புனரமைக்கப்படுவதோடு, அதற்காக 906 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொகையிலிருந்து 800 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படும் நிதியங்களிலிருந்து பயன்படுத்தப்படுவதோடு, மீதி 106 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கப்படும். இந்தக் கருத்திட்டம் கட்டம் கட்டமாக தெற்கு மாகாணம், சபிரகமுவ மாகாணம், களுத்துறை மாவட்டம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம், வடமேல் மாகாணம் ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்படும். இந்தக் கருத்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு உரிய உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.