2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2015 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதியன்று நாடுமுழுவதும் ஏற்பட்ட மின்துண்டிப்பு தொடர்பான ஆரம்ப அறிக்கை - 2015 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதியன்று இரவு நாடுமுழுவதும் ஏற்பட்ட மின்துண்டிப்பு தொடர்பாக இலங்கை மின்சார சபையின் விளக்கத்தை மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதற்கமைவாக, அன்றைய தினம் நிலவிய சீரற்ற காலநிலை உட்பட வார இறுதியில் காணப்பட்ட நீண்ட லீவு காரணமாக மின்சாரக் கேள்வி நடுஇரவில் எதிர்பார்த்த மட்டத்தைவிடக் குறைவடைந்தமை, சிறிய நீர் மின் நிலையங்கள் மற்றும் காற்றுமின் நிலையங்கள் போன்ற புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மின் நிலையங்களின் மின் உற்பத்தி அதிகரித்தமை என்பன காரணமாக மின்சார முறைமையில் ஏற்பட்ட சமச்சீரற்ற நிலைமையினால் மின்துண்டிப்பு நிகழ்ந்ததாக தமக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாண்புமிகு அமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்தார். இந்த மின்துண்டிப்புக்கு உண்மையான காரணங்கள் எவையென்பன பற்றி பக்கசார்பற்ற விசாரணையொன்றை நடாத்துவதற்கும் இத்தகைய நிலைமைகள் எதிர்காலத்தில் உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றியதுமான சிபாரிசுகளைப் பெற்றுக் கொள்வதற்காக உரிய துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்ட சுயாதீனக் குழுவொன்றை நியமிக்குமாறும் இந்தக் குழுவின் அறிக்கையை மூன்று (03) வாரகாலத்திற்குள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்குமாறும் அமைச்சரவையினால் மாண்புமிகு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. |