2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பிராந்திய கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தைப் பலப்படுத்துதல் - பிரதேச மட்டத்திலான உற்பத்திக் கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் பிராந்திய கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அரசாங்கக் காணிகளில் 29 தொழினுட்பப் பேட்டைகள் தாபிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நேரடியான மறைமுகமான தொழில் வாய்ப்புகளும் ஏனைய பொருளாதார நலன்களும் உருவாகியுள்ளன. முதலீட்டாளர்களை ஊக்குவித்து பிராந்திய கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தைப் பலப்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கைத்தொழிலாளர்களுக்கு காணிகளை வழங்கும் போது ஏற்கனவே பின்பற்றப்படும் வழிமுறையை மிக எளியமுறையில் இருக்கும் விதத்தில் திருத்தும் பொருட்டும் முதலீட்டாளர்கள் ஊக்கமடையும் விதத்திலும் குத்தகையை அறவிடும் வழிமுறையொன்றை அறிமுகப்படுத்தும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினாலும் காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |