• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-10-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 43.7 மில்லியன் யூரோக்களைக் கொண்ட மானிய மற்றும் தொழினுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்
- மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இணைந்த கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் இலங்கையில் வர்த்தகம் சார்ந்த உதவிகளுக்கான நிகழ்ச்சித்திட்டங்கள் முதலியவற்றுக்கு நிதி உதவியாக 38 மில்லியன் யூரோக்களும் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபைக்கு தொழினுட்ப உதவியாக 5.7 மில்லியன் யூரோக்களும் கொண்ட 43.7 மில்லியன் யூரோ மானியமொன்றை (அதாவது மீள அறவிடப்படாத நிதி உதவி) வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

இந்த நிதி உதவியிலிருந்து 30 மில்லியன் யூரோக்களை பயன்படுத்தி நடைமுறைப்படுத்தவுள்ள மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இணைந்த கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாவது இந்த மாகாணங்களிலுள்ள குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்வாதாரம், வருமான மட்டம், சுகாதாரம், போசாக்கு முதலியவற்றை மேம்படுத்துதலும் உள்ளூராட்சி நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊடாக வழங்கப்படும் சமூக பொருளாதார சேவைகளை பலப்படுத்துதலுமாகும். இலங்கையில் வர்த்தகம் சார்ந்த உதவிகளுக்கான நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் வெளிநாட்டு சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிக்கான போட்டியை அதிகரித்தல், இது சம்பந்தமான ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கொள்கை மற்றும் ஒழுங்குறுத்தல் மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துதல், ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் GSP+ வர்த்தக சலுகையை பெற்றுக் கொள்வதற்குரிய பணிகளை நடைமுறைப்படுத்துதல் உள்ளடக்கப்பட்ட ஏற்றுமதிக்கான போட்டிகர வர்த்தகக் கொள்கையொன்றைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு 8 மில்லியன் யூரோ மானியத்தை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபைக்கு வழங்கப்படவுள்ள 5.7 மில்லியன் யூரோ பெறுமதி கொண்ட தொழினுட்ப உதவி மூலம் கழிவுநீர் முகாமைத்துவப் பிரிவின்பால் விசேட கவனம் செலுத்தி இந்த சபையின் நிறுவன முகாமைத்துவம் மற்றும் தொழினுட்ப மட்ட தேர்ச்சி அபிவிருத்திக்கு தொழினுட்ப உதவிகள் வழங்கப்படும்.

இதன்சார்பில் உரிய உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.