2015-08-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திவிநெகும சமூக பாதுகாப்பு நிதியத்தை சட்டபூர்வமானதாக்குதல் - குறைந்த வருமானம் பெறுவோர்களின் வறுமை நிலையை இல்லாதொழிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள சமுர்த்தி சமூகப்பாதுகாப்பு நிதியம் 1997 சனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து செயற்படுத்தப்பட்டுள்ளதோடு, பொருளாதார அபிவிருத்தியை நோக்கி செல்லும் சமுர்த்தி பயனாளிகளுக்கு ஏற்படும் எதிர்பாராத பிச்சினைகளின் போது நிதியுதவி வழங்குவது அதன் நோக்கமாகும். ஏற்கனவே 1,478,288 குடும்பங்கள் சமுர்த்தி நிவாரணத்திற்கு உரிமைப் பெற்றுள்ளதோடு, மாதாந்த சமுர்த்தி நிவாரணத்திலிருந்து 45/- ரூபா மாதாந்த பங்களிப்புத் தொகையொன்று இந்த நிதியத்திற்கு வரவு வைக்கப்படுகின்றது. இந்த நிதியத்தை சட்டபூர்வமானதாக ஆக்குவதற்கு வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இதனை முறையாக சட்டபூர்வமானதாக ஆக்கும் வரை நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சபை சட்டத்தின் கீழ் நம்பிக்கை பொறுப்பொன்றாக நடாத்திச் செல்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |