2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிருமாணிக்கப்பட்ட 200 படுக்கைகளைக் கொண்ட புதிய காவறைத் தொகுதிக்கு மருத்துவ உபகரணங்களையும் தளபாடங்களையும் வழங்குதல் - வவுனியா மாவட்டத்திலிருந்தும் அதற்கண்மித்த மாவட்டங்களிலிருந்தும் வருகைதரும் பொது மக்களுக்கு சுகாதார சேவையை வழங்கும் இந்தப் பிரதேசத்திலுள்ள ஒரே வைத்தியசாலை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையாகும். இந்த வைத்தியசாலை வடக்கு மாகாண சபையின் கீழ் நிருவகிக்கப்படுகின்றதோடு, இது 2009 ஆம் ஆண்டிலிருந்து அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. ஏற்கனவே இந்த வைத்தியசாலையில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, சீரீ ஸ்கேன் பிரிவு, வாய்முக சீராக்கல் சிகிச்சைப் பிரிவு போன்ற புதிய பிரிவுகளும் தாபிக்கப்பட்டுள்ளன. இந்த வைத்தியசாலையில் இரண்டு (02) பிரிவுகளாக மருத்துவ மற்றும் சிறுவர் சிகிச்சைப் பிரிவுகளில் 200 படுக்கைகளைக் கொண்ட காவறைத் தொகுதி இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிருமாணிக்கப்பட்டுள்ளதோடு, இந்த காவறைத் தொகுதிக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களையும் தளபாடங்களையும் கொடையொன்றாக வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் விரும்பம் தெரிவித்துள்ளது. இந்த உபகரணங்களினதும் தளபாடங்களினதும் பெறுமதி அண்ணளவாக 109.5 மில்லியன் ரூபா ஆவதோடு, இந்த நன்கொடையைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பொருட்டு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் மாண்புமிகு (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |