2015-07-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ராஜகிரிய, கனேமுல்ல மற்றும் பொல்கஹவெல மேற்பால நிருமாணிப்புக் கருத்திட்டம் - அரசாங்கத்தினால் கொழும்பு மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் வீதி நெரிசல்களை குறைக்கும் நோக்கில் இரும்பு மேற்பாலங்களை நிருமாணித்தல் அடங்கலாக பல்வேறுபட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை தேசிய வீதி முறைமையின் அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்தவுள்ளது. இதற்கமைவாக, ராஜகிரிய சந்தியிலிருந்து நான்கு ஓடு பாதைகளைக் கொண்ட மேற்பாலமொன்றை நிருமாணிப்பதற்கும் இதற்கு மேலதிகமாக எந்நேரமும் புகையிரத கடவை மூடப்படுவதன் காரணமாக உருவாகும் கடும் வாகன நெரிசலை குறைப்பதற்காக கனேமுல்லை மற்றும் பொல்கஹவெல புகையிரத கடவைகளுக்கு மேலாக இரண்டு ஓடுபாதைகளைக் கொண்ட இரண்டு மேற்பாலங்களை நிருமாணிப்பதற்கும் தேவையான நிதியினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஸ்பானிய அரசாங்கத்துடனும் ஸ்பானிய BBVA வங்கியுடனும் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்கு கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |