• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-06-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமூகமயப்படுத்தப்பட்ட பயிலுநர்களுக்கு சுயதொழில் கடன் வசதிகளை ஏற்பாடு செய்தல்

- பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்களுக்கு சுயதொழில் கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவையினால் 2012 ஆம் ஆண்டில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டத்தின் கீழ் சமூகமயப்படுத்தப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு அவர்களுடைய வாழ்வாதார நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடாத்திச் செல்வதற்கு பாரிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதோடு, சமூகத்தில் நட்பிரசைகளாக வாழ்வதற்குத் தேவையான பொருளாதார சூழலை உருவாக்குவதற்கும்கூட இது பாரிய சக்தியாய் உள்ளது. 2014‑12‑31 ஆம் திகதிவரை அரச வங்கிகளின் ஊடாக இவ்வாறு வழங்கப்பட்டுள்ள கடன்தொகையானது 302 மில்லியன் ரூபாவை விஞ்சியுள்ளது. இதன்கீழ் எதிர்காலத்தில் கடன் பெறும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 5,750 இற்கும் மேலாகும். இதற்கமைவாக, இந்த கடன் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தேவையான திருத்தங்களுடன் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, லங்காபுத்ர வங்கி, இலங்கை சேமிப்பு வங்கி என்பவற்றின் ஊடாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.