2013-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
“சமூக அபிவிருத்திக்கான நீர்வள ஒத்துழைப்பு.” பற்றிய சருவதேச மாநாடு - ஆகஸ்ட் 2013 - இந்த மாநாடு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் 2013 ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதிவரை அநுராதபுரம் நகரத்தில் நடாத்தப்படவுள்ளது. “சருவதேச நீர் ஒத்துழைப்பு வருடம்" என்னும் ஐக்கிய நாடுகளினால் பிரகடனப்படுத்தப்பட்ட நோக்கத்தை கொண்டாடும் பொருட்டு இந்த மாநாடு நடாத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டின் நோக்கம் நீர் கருத்திட்டங்களை முகாமித்துக் கொள்ளும் சமூகத்தினருக்கிடையில் அறிவூட்டல், திறமுறை, சிறந்த தேர்ச்சி ஆகியவற்றை பரிமாறிக்கொள்வதற்கும் பரஸ்பர புரிதுணர்வு, ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும் பொருத்தமான களமொன்றை அமைத்துக் கொடுப்பதாகும். சமூகம்சார் நீர்வழங்கல், துப்புரவேற்பாட்டுக் கருத்திட்டங்களின் மூலம் குடிநீர் மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகளுக்குத் தேவையான நீரை தாமே பெறுவதற்கு சமூக அமைப்புகளை ஊக்குவிப்பது சம்பந்தமாக இலங்கை 15 வருடங்களுக்கும் கூடுதலான அனுபவத்தைக் கொண்டுள்ளது. தேசிய சமூக நீர் நம்பிக்கைப் பொறுப்பினதும் நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையினதும் ஒத்துழைப்புடன் இந்த நீர்வழங்கல் திட்டங்களை முகாமிப்பதற்கும் கையாள்வதற்கும் பாராமரிப்பதற்குமான அதிகாரம் இந்த கருத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்காகத் தாபிக்கப்பட்ட 3,500 க்கும் மேற்பட்ட சமூகஞ்சார் அமைப்புகளுக்கு தற்போது கையளிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், ஆப்கானிஸ்தான், மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 500 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாநாட்டிற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |