2024-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களைத் துரிதப்படுத்துதல் - கடந்த சில வருடங்களாக நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக கிராமிய மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல அபிவிருத்தி கருத்திட்டங்களை இடைநடுவில் நிறுத்த வேண்டி ஏற்பட்டது. ஆயினும் குறித்த கருத்திட்டங்கள் சார்பில் அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிடத்தக்க முதலீட்டினை மேற்கொண்டுள்ளமையினால், குறித்த கருத்திட்டங்களை துரிதமாக பூர்த்தி செய்து அவற்றின் மூலம் எதிர்பார்த்த நன்மைகளை கிராமிய மக்களுக்கு கிடைப்பதற்கு ஆவன செய்யவேண்டியுள்ளது. பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளாவன உரிய பிரதேசங்களில் ஏற்கனவே இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு போதுமானதாக இல்லையென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க கிராமிய மட்டத்தில் இடைநடுவே நிறுத்த நேர்ந்துள்ள அபிவிருத்தி கருத்திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மேலும் 2,000 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை பண்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்வதற்கும் சனாதிபதி செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் விசேட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகளை மேலும் 1,000 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பதற்குமாக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |