2024-03-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
அமைச்சுக்களுக்கு இடையேயான சுற்றுலாக் குழுவைத் தாபித்தல் - இலங்கையில் சுற்றுலா தொழிலின் தற்போதைய மறுமலர்ச்சி நாட்டின் பொருளாதார மீள் கட்டமைப்புக்கும் விருத்திக்கும் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளமையினால் இந்த துறையை மேம்படுத்துவதற்கு நீண்டகால நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆண்டொன்றில் ஆகக்குறைந்தது 05 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவழைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் 2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது. சுற்றுலா கைத்தொழிலின் பல்வேறுபட்ட தன்மை மற்றும் அதற்குரிய பல்வேறு சொத்துக்கள், சட்டங்கள் மற்றும் பொறுப்புக்கள் என்பன ஒருசில அரசாங்க நிறுவனங்களுக்கிடையில் பகிர்ந்து செல்கின்றமையினால் எதிர்பார்த்த நலன்களை அடைவதற்கு உரிய நிறுவனங்களுக்கிடையில் வினைத்திறன் மிக்க ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் பேணுவது அத்தியாவசியமானதாகும். அதன் பொருட்டு சனாதிபதியின் செயலாளரின் தலைமையில் உரிய அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய அமைச்சுக்களுக்கு இடையேயான சுற்றுலாக் குழுவைத் தாபிக்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |