2024-03-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை (அடுத்த கூட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்கு உட்பட்டு) |
யப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யப்பான் அரசாங்கத்தினால் 1,600 மில்லியன் யப்பான் யென்கள் வழங்குதல் - இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில், பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குதல் மற்றும் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு அரசாங்கத் துறையை பலப்படுத்துதல் என்பன மூலம் யப்பான் அரசாங்கம் அதன் ஒத்துழைப்பை விரிவுபடுத்தியுள்ளது. அதற்கிணங்க, யப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பின்வரும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஆயிரத்து அறுநூறு மில்லியன் யப்பான் யென்களை (அண்ணளவாக 3.3 பில்லியன் ரூபா) வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
i இலங்கை கரையோர பாதுகாப்பு படையின் எண்ணெய் கசிவு தொடர்பில் உடனடியாக செயலாற்றும் மற்றும் முகாமைத்துவத்தினை மேம்படுத்தும் கருத்திட்டம். ii வட மாகாணத்திலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் மகப்பேறு மற்றும் சிறுவர் சிகிச்சை சார்பில் உதவி கருவிகளை வழங்கும் மற்றும் வட மாகாணத்திலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆடை கற்கைநெறிகளுக்கான உதவி கருவிகளை வழங்கும் கருத்திட்டம். iii வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான உதவி கருவிகளை வழங்கும் கருத்திட்டம். அதற்கிணங்க, மேற்போந்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு யப்பான் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மானிய உதவியினைப் பெற்றுக்கொள்வதற்கு யப்பான் அரசாங்கத்துடன் பரிமாற்ற ஆவணங்களிலும் ஏனைய உரிய ஆவணங்களிலும் கைச்சாத்திடும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |