2023-09-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நிதித்துறை நிலைப்படுத்தல் மற்றும் சீர்த்திருத்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கொள்கையினை அடிப்படையாகக் கொண்ட கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்தல் - நிதித்துறை நிலைப்படுத்தல் மற்றும் சீர்த்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இரண்டு துணை நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் கொள்கையினை அடிப்படையாகக் கொண்ட இரண்டு கடன் வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஆரம்ப கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது. குறித்த முதலாவது துணை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பிணக்குகளை முகாமிக்கும் கட்டமைப்பு மற்றும் நிதித்துறை நிலைப்படுத்தலை மேம்படுத்துவதற்கான துரித சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துதற்கு முன்மொழியப்பட்டுள்ளதோடு, இரண்டாவது துணை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முகங் கொடுக்கக்கூடிய விதத்திலான அனைத்தும் உள்ளடக்கப்பட்ட நிதி முறைமையொன்றை கட்டியெழுப்புவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. முதலாவது துணை நிகழ்ச்சித்திட்டம் சார்பில் 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வருடாந்தம் 2 சதவீத வட்டியின் கீழ் ஐந்துவருட சலுகை காலத்துடன் 25 வருட காலப்பகுதியில் மீள செலுத்தும் வசதியினை பெற்றுக் கொள்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |