2023-09-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
காட்டுத் தீ ஏற்படுவதை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான வழிமுறைகளை மேற்கொள்ளல் - மனிதர்கள் காடுகளுக்கு அருகாமையில் தீ வைப்பதால் முக்கியமாக வறட்சியான காலநிலைமை நிலவும் சந்தர்ப்பங்களில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் போக்கு நிலவுகின்றது. பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, மொனராகலை, பொலன்நறுவை, குருநாகல், புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இந்த நிலமை பரவலாக காணப்படுகின்றது. இந்த ஆண்டில் இதுவரை சுமார் 150 தடவைகள் காடு தீப்பற்றியதாக அறிக்கையிடப்பட்டுள்ளதோடு, இதன் காரணமாக சுமார் 2,600 ஹெக்டயார் காடு அழிவடைந்துள்ளது. ஆதலால், தேசிய மட்டத்திலிருந்து கிராமிய மட்டம் வரையிலான அரசாங்க பொறிமுறையினதும் ஏனைய உரிய தரப்பினர்களினதும் ஒத்துழைப்பினைப் பெற்று காடுகள் தீப்பற்றுவதை தடுப்பதற்கும் ஏற்படும் தீயினை அணைப்பதற்குமான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |