2023-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வேலைவாய்ப்புக்காக புலம் பெயர்வது தொடர்பில் இலங்கையின் தேசியக் கொள்கை மற்றும் செயற்பாட்டுத்திட்டம் 2023 - 2027 - இலங்கையின் வேலைவாய்ப்புக்காக புலம் பெயர்வது தொடர்பிலான முதலாவது கொள்கை தேசிய வேலைவாய்ப்புக்கான புலம்பெயர் கொள்கையாக 2008 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை உரிய அமைச்சுக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், நிபுணர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அபிவிருத்தி பங்காளர்கள், சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனங்கள் உட்பட புலம்பெயர் தொழிலாளர் பிரிவின் சகல தரப்பினர்களினதும் கருத்துக்களைப் பெற்று மீண்டும் மீளாய்வு செய்யப்பட்டு வேலைவாய்ப்புக்காக புலம் பெயர்வது தொடர்பில் இலங்கையின் தேசியக் கொள்கை மற்றும் செயற்பாட்டுத்திட்டம் 2023 - 2027 வரையப்பட்டுள்ளது. அதற்கிணங்க, தேசிய மற்றும் சர்வதேச சட்டம் மற்றும் கொள்கை கட்டமைப்புகளுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள குறித்த கொள்கை மற்றும் செயற்பாட்டுத்திட்டம் 2023 - 2027 ஐ நடைமுறைப்படுத்தும் பொருட்டு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |