2023-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தொழில் வழிகாட்டலின் மூலம் மூன்றாம் நிலைக் கல்வியை மேம்படுத்துதல் - க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையை பூர்த்தி செய்த மாணவர்கள் க.பொ.த (உயர் தரம்) கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கும்வரை அல்லது க.பொ.த (உயர் தரம்) பரீட்சையை பூர்த்தி செய்த மாணவர்கள் தொழிற் கல்வியில் ஈடுபடும் வரை பாடசாலை முறைமையினுள் தக்கவைத்து தொழிற் கல்விக்குரிய ஐந்து ஆரம்ப துறைகளை தழுவும் விதத்தில் பாடத்திட்டத்தினை பூர்த்தி செய்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. தொழிற் கல்விக்கு பொதுவாக முக்கியமான தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கில மொழி என்பவற்றை முதன்மையாக கொண்டும் அதற்கு ஒருங்கிணைவாக அனுபவ ரீதியிலான மென் திறன்களை அபிவிருத்தி செய்வதும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தை முன்னோடி கருத்திட்டமொன்றாக நாட்டின் சகல கல்வி பிரிவுகளையும் தழுவும் விதத்தில் தெரிவுசெய்யப்பட்ட 320 பாடசாலைகளில் 3 - 4 மாதங்கள் கொண்ட காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் பின்னர் முன்னோடி கருத்திட்டத்தின் பெறுபேற்றின் மீது 2024 ஆம் ஆண்டிலிருந்து குறித்த கருத்திட்டத்தை தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கும் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |