2023-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வெளிநாடுகளிடமுள்ள இலங்கையின் கலாசார மரபுரிமைகளை மீளப் பெற்றுக் கொள்தல் – யுனெஸ்கோ அமைப்பினால் 1970 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட கலாசார சொத்துக்களின் சட்டவிரோதமான இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் உரிமையினை கையளித்தலை தடை செய்தல் மற்றும் தடுத்தல் பற்றிய சாசனத்தின் 7 ஆம் 13 ஆம் பிரிவுகளுக்கு அமைவாக தற்போது வெளிநாடுகளிடமுள்ள அத்தகைய ஏதேனும் நாடொன்றுக்குச் சொந்தமான கலாசார சொத்தினை அது சொந்தமான நாட்டிற்கே மீண்டும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் உரிமையுள்ளது. அதற்கிணங்க காலனித்துவ நாடுகளிலிருந்து கொண்டுசெல்லப்பட்டு தற்போது நெதர்லாந்து அரசாங்க நூதனசாலைகளில் வைக்கப்பட்டுள்ள தொல் பொருட்களை மீண்டும் அந்த தொல்பொருள் சொந்தமான நாடுகளுக்கு ஒப்படைப்பதற்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்திடமுள்ள அத்தகைய ஆறு (06) தொல்பொருட்கள் சம்பந்தமாக தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தினதும் சுயாதீன ஆராய்ச்சியாளர்களினதும் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிக் கருத்திட்டத்திற்கு அமைவாக குறித்த தொல்பொருட்கள் யாவும் காலனித்துவ காலப்பகுதியில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொல்பொருட்களை மீண்டும் இந்நாட்டிற்கு பெற்றுக் கொள்ளும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஏற்கனவே இராஜதந்திர ரீதியில் கோரிக்கையினை முன்வைத்துள்ளது. அதற்கிணங்க, இது சம்பந்தமான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தற்போது பல்வேறு நாடுகளிலுள்ள இலங்கையின் தொல்பொருட்களை மீண்டும் நாட்டிற்கு பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்குமான உத்தியோகத்தர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |