2023-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையைத் தாபித்தல் – தென் ஆபிரிக்க சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சரின் அழைப்பின் பேரில் அந்நாட்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ஆரம்ப ஆய்வினை மேற்கொள்ளும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் விஜயம் மேற்கொண்டனர். இந்த விஜயத்தின் போது தென் ஆபிரிக்காவின் சனாதிபதி, சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் உட்பட அந்நாட்டு அரசாங்கத்தின் பிரதானிகள் பலருடன் கலந்துரையாடினர். அதற்கிணங்க, தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு எமது நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைத் தாபிக்கும் பொருட்டு நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினாலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |