2023-05-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வௌிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு முழு அளவிலான மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம் - வௌிநாட்டில் தொழில் புரிபவர்களினால் அந்நாட்டில் பெறும் வருமானத்தை சட்டபூர்வமான வழியில் இந்நாட்டிற்கு அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்கில் வௌிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு முழு அளவிலான மின்சார வாகன இறக்குமதி சார்பில் அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க மின்சார வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்கு வௌிநாட்டில் தொழில்புரிபவர்கள் 2022‑05‑01 ஆம் திகதி தொடக்கம் 2022‑12‑31 ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் அவர்கள் இந்நாட்டிற்கு அனுப்பியுள்ள அந்நிய செலாவணி அளவானது அடிப்படையாகக் கொள்ளப்படும். ஆயினும், இந்தக் காலப்பகுதியில் அனுப்பியுள்ள அந்நிய செலாவணி அளவுக்கு அமைவாக அவர்கள் எதிர்பார்க்கும் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு இல்லாமை தெரியவருகின்றது. ஆதலால் இந்த திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இந்நாட்டிற்கு அனுப்பிய அந்நியசெலாவணி அளவினை பரிசீலனை செய்யும் கால எல்லையை 2023‑09‑15 ஆம் திகதிவரை நீடிக்கும் பொருட்டு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |