2023-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சுகாதார முறைமை மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் 75 பிணியாளர் வண்டிகளை கொள்வனவு செய்தல் – ஆசிய அபிவிருத்தி வங்கி, வறுமையை ஒழிப்பதற்கான யப்பான் நிதியம் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் மீள் நிதியம் என்பவற்றுடன் 123 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியத்தின் மூலம் சுகாதார முறைமை மேம்பாட்டுக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த கருத்திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியத்தின் மூலம் 50 பிணயாளர் வண்டிகளையும் வறுமையை ஒழிப்பதற்கான யப்பான் நிதியத்தின் கொடையின் மூலம் 25 பிணயாளர் வண்டிகளையும் கொள்வனவு செய்வதற்கு நிதி ஏற்பாடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பிணியாளர் வண்டிகளிலிருந்து 30 பிணியாளர் வண்டிகளை சுகாதார அமைச்சுக்கும் மீதி 45 பிணியாளர் வண்டிகளை சுவசரிய மன்றத்திற்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய பெறுகை நடவடிகையினை துரிதப்படுத்தி குறித்த பிணியாளர் வண்டிகளை கொள்வனவு செய்யும் பொருட்டு சுகாதார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |