2023-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தை செலுத்துதல் - உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தலில் அபேட்சகர்களாக சுமார் 3,000 அரசாங்க உத்தியோகத்தர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதோடு, அவர்களுக்கு தாபனவிதிக் கோவையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் சம்பளமற்ற லீவு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தல் தற்போது பிற்போடப்பட்டுள்ளமையினால் அவர்களுடைய சம்பளமற்ற லீவு காலம் நீடிக்கப்பட்டுள்ளதன் விளைவாக குறித்த உத்தியோகத்தர்கள் பொருளாதார ரீதியில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். ஆதலால், உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2023‑03‑09 ஆம் திகதி தொடக்கம் 2023‑04‑25 ஆம் திகதிவரையிலான காலப்பகுதிக்குரியதாக இந்த உத்தியோகத்தர்களுக்கு அடிப்படை சம்பளத்தை செலுத்தும் பொருட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |