2023-03-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஹொரண ஏற்றுமதி செய்முறை வலயத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை நிர்மாணித்தல் - இலங்கை முதலீட்டுச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் நீர் வழங்கல் திட்டமொன்றின் மூலம் ஹொரண ஏற்றுமதி செய்முறை வலையத்திற்கும் வகவத்த கைத்தொழில் பேட்டைக்கும் நீர் வழங்கப்படுவதோடு, அதன் நாளொன்றுக்கான கொள்ளளவு 3,000 கன மீற்றர்களாகும். ஆயினும், ஹொரண மற்றும் வகவத்த வலயங்களிலுள்ள முதலீட்டாளர்களின் நாளாந்த நீர் தேவை சுமார் 4,350 கன மீற்றர்களாகும் என்பதனால் இந்த நீர் தேவையினை பூர்த்தி செய்வதற்கு இயலுமாகும் வகையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நாளொன்றுக்கு 2,000 கன மீற்றர் நீர் கொள்ளளவுடைய புதிய நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு தேவையான நிதி ஏற்பாட்டினை வழங்குவதற்கு இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் சபையினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கை முதலீட்டுச் சபையின் நிதி ஏற்பாடுகளை பயன்படுத்தி குறித்த புதிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை ஹொரண ஏற்றுமதி செய்முறை வலயத்தில் நிர்மாணித்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு சனாதிபதியும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |