• Increase font size
  • Default font size
  • Decrease font size

2023-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை தாபித்தல்
- அரசாங்க சேவையிலிருந்து இளைப்பாறுபவர்களுக்கு ஓய்வூதிய நலனுடன் ஓய்வூதியத்தினைப் பெற்றுக் கொள்வதற்கும் ஓய்வு பெற்றவர்கள் நாட்டிற்கு சுமையின்றி அவர்களுடைய ஓய்வு காலத்தை கழிப்பதற்கு பொருத்தமான சூழலை உறுதிசெய்வதற்கும் இயலுமாகும் வகையில் தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் என்னும் பெயரில் நிதியமொன்றைத் தாபிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அரசாங்க ஊழியர் ஒருவர் அரசாங்க சேவையில் இணைந்ததன் பின்னர் அவருடைய அடிப்படைச் சம்பளத்தில் 8 சதவீதமும், தொழில் வழங்குநரின் பங்களிப்பாக 12 சதவீதமும் மாதாந்தம் உத்தேச நிதியத்திற்கு வரவு வைக்கப்படுதல் வேண்டும். உத்தேச ஓய்வூதிய நிதியத்தை முகாமைத்துவம் செய்யும் பொருட்டு முகாமைத்துவ சபையினால் நிர்வகிக்கப்படும் சுயாதீன நிறுவனமொன்று தாபிக்கப்படுவதோடு, நிதியத்தின் முகாமைத்துவத்திற்கென விசேட தகைமைகளைக் கொண்ட நிதியத்தின் முகாமையாளர் ஒருவர் நியமிக்கப்படுவார். உத்தேச தேசிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் எதிர்வரும் காலங்களில் ஆட்சேர்ப்பு செய்யப்படும் அரசாங்க ஊழியர்களுக்கு ஏற்புடையதாகும். அதேபோன்று 2016 சனவரி மாதத்தின் பின்னர் அரசாங்க சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்கள் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படும் ஓய்வூதிய திட்டத்திற்கு உட்பட வேண்டும் என்னும் ஏற்பாடுகள், அவர்களின் நியமனக் கடிதங்களில் உள்ளடங்கப்பட்டுள்ளமையினால் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் உத்தேச தேசிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கு அவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கிணங்க, தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு இயலுமாகும் வகையில் சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்ட வரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.