2023-02-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நாரங்கல மலைத் தொடரை சார்ந்த வலயத்தை வனசீவராசிகள் சரணாலயமொன்றாக பிரகடனப்படுத்துதல் - பதுளை மாவட்டத்தின் கந்தேகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் சொரணாதொட்ட பிரதேச செயலாளர் பிரிவின் திக்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடல் மட்டத்திலிருந்து 1,450 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில் இந்த நாரங்கல மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் மிகவும் முக்கியமான நீரேந்துப் பிரதேசமாகக் காணப்படுவதுடன், அங்கு 100 இற்கு மேற்பட்ட நீர் ஊற்றுக்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, இம்மலைத்தொடரிலிருந்து ஓடும் கமஓயா, மொரகொல்ல ஓயா மற்றும் அம்பன்கங்கை ஓயா போன்றவை நாரங்கல மலைத்தொடரின் நீர் ஊற்றுக்களின் மூலம் போசாக்கடைகின்றன. இந்த மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள பல கிராமங்களுக்கான நீர் தேவை இந்த ஆறுகளின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது. அதேபோன்று குறித்த மலைத்தொடர் பகுதி உயிர்ப்பல்வகைமையுடன் கூடிய பிரதேசமாகும். இந்த விடயங்களைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு மலைத்தொடர் அமைந்துள்ள 239.276 ஹெக்ரயார் விஸ்தீரணம் கொண்ட நிலப்பகுதியை நாரங்கல சராணாலயமாக பிரகடனப்படுத்துவதற்கும், குறித்த பிரதேசத்திற்குரிய தனியார் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான காணிகளை அரசாங்கத்திற்கு சுவீகரித்துக் கொள்வதற்கும் அதன் பின்னர் முழு பிரதேசத்தையும் வன சீவராசிகள் தேசிய ஒதுக்கமாக பிரகடனப்படுத்துவதற்கும் வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |