2023-02-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கை சம்பந்தமாக கொழும்பில் 2023 சனவரி 09 ஆம் 10 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்ட மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை - இருதரப்பினரும் பல துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பினை பலப்படுத்துவதன் மூலம் மேலும் விருத்தி செய்யக்கூடிய பொருளாதார சாத்தியம் மற்றும் பூர்த்திசெய்யவேண்டிய பொருளாதாரக் கட்டமைப்புக்களை இனங்கண்டு தற்போது காணப்படுகின்ற இருதரப்பு வர்த்தகப் பெறுமதியினை 550 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களிலிருந்து 1.5 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் நோக்குடன் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான ஆரம்ப பணிகள் 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கிணங்க, பண்டங்கள், தோற்றுவாய்கள் தொடர்பான சட்டங்கள், சேவைகள், முதலீடுகள், பொருளாதார ஒத்துழைப்புக்கள், வர்த்தக பரிகாரங்கள், சுங்க நடவடிக்கை முறைகள், வர்த்தக வசதிகள் மற்றும் புலமைச் சொத்துக்கள் என்பவற்றை உள்ளடக்கி பிரேரிக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு 2018‑07‑03 ஆம் திகதி நடைப்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 2018 யூலை மாதம் முதலாம் சுற்று கலந்துரையாடல் இலங்கையிலும், இரண்டாம் சுற்றுப் கலந்துரையாடல் 2018 செப்ரெம்பர் மாதம் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலும் நடாத்தப்பட்டன. அதன் மூன்றாம் சுற்றுப் கலந்துரையாடல் 2023 ஜனவரி மாதம் 09 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்தப்பட்டதோடு, குறித்த கலந்துரையாடலின் முன்னேற்றம் பற்றி நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக மாண்புமிகு சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |